தென்மராட்சி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் 19.09.2025. வெள்ளிக்கிழமை பி.ப 1.30 மணிக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் அவர்களின் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கௌரவ நகரசபை தவிசாளர்,கௌரவ பிரதேச சபை தவிசாளர் மற்றும் நகர ,பிரதேச சபைகளின் அழைக்கப்பட்ட கௌரவ உறுப்பினர்கள் , திணைக்களத் தலைவர்கள்,பிரதிநிதிகள், சாவகச்சேரி பொலீஸ் நிலைய உத்தியோகத்தர், இராணுவ அதிகாரிகள், சமூகமட்ட அமைப்புக்களது பிரதிநிதிகள் மற்றும் பிரதேச செயலக உத்தியோத்தர்கள் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் பிரதேச செயலாளர் திரு.F.C.சத்தியசோதி அவர்கள் வரவேற்புரையாற்றுகையில் பொது நிர்வாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு செயலாளரின் HA/DEVP/14/DCC/VOll viii இலக்க 2025.09.01 திகதிய உள்நாட்டலுவல்கள் பிரிவு சுற்று நிருபம் 03/2025இற்கமைய இக்கூட்டம் நடைபெறுவதாகவும் இச்சுற்றறிக்கையின் முக்கிய விடயங்களை குறிப்பிட்டும் உரையாற்றினார். தொடர்ச்சியாக தலைமை உரையாற்றிய கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் அவர்கள் அனைவரும் இணைந்து தென் மராட்சி பிரதேசத்தின் அபிவிருத்தியை முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். அனைத்து அபிவிருத்தி பணிகள், நலன்புரி மற்றும் சமூகப் பாதுகாப்பு நிகழ்ச்சித் திட்டங்களும் ஒன்றிணைந்த ஒரு வேலை திட்டத்தின் கீழ் அனைத்து பங்குதாரர்களுடனும் ஒன்றிணைந்த வகையில் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள பிரஜைகள் மைய அபிவிருத்திக் கட்டமைப்பான "பிரஜாசக்தி" நிகழ்ச்சித் திட்டத்தின் கட்டமைப்பு,அதன் தொழிற்பாடுகள் தொடர்பாகவும் கிராமிய தேவைப்பாடுகள் மற்றும் பிரச்சனைகளை இக்கட்டமைப்பின் ஊடாக அணுகி தீர்வு காணும் வழிவகைகள் தொடர்பாகவும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.பின்னர் நிகழ்ச்சி நிரலின்படி, கூட்டத்திற்கு சமூகமளிக்க முடியாமை தொடர்பாக கிடைக்கப்பெற்ற கடிதத்தை பிரதேச செயலாளர் சபையில் வாசித்தார்.
இக்கூட்டத்தில் 27. 3.2025 அன்று இடம் பெற்ற கடந்த ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் முன்னேற்ற நிலைமைகள் விரிவாக ஆராயப்பட்டதோடு பிரதேசத்தில் தற்போது பல்வேறு அரச திணைக்களங்களாலும் மேற்கொள்ளப்பட்டு வரும் வேலை திட்டங்கள் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துதல், எழுதுமட்டுவாழ் மயான விடுவிப்பு, வீதிப்புனரமைப்பு பணிகள், வெள்ள அனர்த்த தணிப்பு நடவடிக்கைகள், கால்நடை வைத்திய சேவைகள், கால்நடைக் கட்டுப்பாடு, பயிர் அழிவு தடுப்பு நடவடிக்கைகள், போக்குவரத்து, பொதுமக்களிற்கான காணி வழங்கற் செயற்பாடுகள், வைத்தியசாலை தேவைப்பாடுகள், பாடசாலை தொடங்கும் மற்றும் முடிவடையும் நேரங்களில் கனரக வாகனங்களின் போக்குவரத்தை கட்டுப்படுத்துதல் மற்றும் சமூகமட்ட அமைப்புகளின் கோரிக்கைகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டன.
![]() |
|
![]() |
![]() |
மூன்றாவது கணக்காய்வு முகாமைத்துவ குழுக்கூட்டம் 17.09.2025 அன்று காலை 9.00 மணிக்கு பிரதேச செயலாளர்
திரு.F.C சத்தியசோதி அவர்கள் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் மாவட்ட செயலக பிரதம உள்ளக கணக்காய்வாளர் திரு.செ.ரமேஸ்குமார் மற்றும் பிரதேச செயலக கணக்காளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், நிர்வாக உத்தியோகத்தர், முகாமையாளர் சமுர்த்தி தலைமைப்பீடம், பிரதேச செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், கிராம அலுவலர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர். இக் கலந்துரையாடலில் பிரதேச செயலகத்தின் நிதி, நிர்வாக செயற்பாடுகள் நிதி பிரமாணங்கள், தாபன விதிக் கோவைகளுக்கமைவாக உள்ளக கட்டுப்பாட்டினை சிறந்த முறையில் நடைமுறைப்படுத்துவதன் மூலம் பொதுக்கணக்காய்வு ஐயவினாக்களைக் குறைத்து கொள்ள முடியும் என்பதோடு பொது மக்களிற்கு சிறந்த சேவையினை வழங்குகின்ற நிறுவனமாக செயற்பட முடியும் என பிரதேச செயலாளர் அவர்கள் குறிப்பிட்டார். மாவட்ட செயலக பிரதம உள்ளக கணக்காய்வாளர் கருத்து தெரிவிக்கையில் கிராம மட்ட உத்தியோகத்தர்கள் தமது கடமைகளை விரைவாகவும் வினைத்திறனாகவும் மேற்கொள்ள வேண்டும் என்பதுடன் நிதி அறிக்கைகள் உடனுக்குடன் கிடைக்கப்பெறுவதாகவும் தனது உரையில் தெரிவித்தார்.மேலும் பிரதேச செயலக நிதி ஒதுக்கீடுகள் மற்றும் செலவீனங்கள் தொடர்பான முன்வைப்பானது கணக்காளர் அவர்களால் முன்வைக்கப்பட்டது.
![]() |
|
தென்மராட்சி பிரதேசத்தில் டெங்கு கட்டுப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடலானது பிரதேச செயலாளர் திரு F.C சத்தியசோதி அவர்களின் தலைமையில் 12.09.2025 வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவரையும் வரவேற்றுக்கொண்ட பிரதேச செயலாளர் எதிர்வரும் காலம் மழை காலம் என்பதனால் நீர் தேங்ககூடிய கொல்கலன்களை உரிய முறையில் அகற்றுதல், விழிப்புணர்வு செயற்பாடுகள் மற்றும் சிரமதான பணிகளை முன்கூட்டியே மேற்கொள்வதன் மூலம் நாம் டெங்கு நோயிலிருந்து பாதுகாத்துகொள்ளலாம் எனவும் டெங்கு நோய் தொடர்பாக தொடர்ச்சியான கட்டுப்பாட்டு கண்காணிப்பு அவசியம் எனவும் தெரிவித்து இதற்கு அனைவரின் ஒத்துழைப்பினையும் வழங்குமாறு கேட்டுகொண்டார்.கிராம சேவையாளர்கள் தலைமையில் கிராம மட்டத்தில் டெங்கு கட்டுப்பாட்டு கூட்டங்களை நடாத்தி அது தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்குமாறு பிரதேச செயலாளர் அவர்கள் கேட்டுக்கொண்டார்.கிராம மட்ட உத்தியோகத்தர்கள் அவர்களுடைய கிராம மட்ட பொது சுகாதார பரிசோதகர்களுடன் தொடர்பு கொண்டு விழிப்புணர்வு நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறும் தெரிவித்தார்.
சிரேஷ்ட பொதுசுகாதார பரிசோதகர் கருத்து தெரிவிக்கையில்,டெங்கு நோயாளர்கள் அதிகம் காணப்படும் கிராம அலுவலர் பிரிவுகளாக சவாகச்சேரி, மண்டுவில், நுணாவில் மேற்கு , கைதடி போன்ற பகுதிகள் இனங்காணப்பட்டதாகவும் விசேட டெங்கு ஒழிப்பு வாரமாக எதிர்வரும் 22,23,24ம் திகதிகளில் கைதடி வடக்கு, கொடிகாமம் தெற்கு, கொடிகாமம் மத்தி நகரப்புரத்தை அண்டிய பிரதேசங்கள் மீசாலை கிழக்கு போன்ற கிராம அலுவலர் பிரிவுகளில் களத்தரிசிப்பு, விழிப்புணர்வு செயற்பாடுகள் மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தார்.பிரதிக்கல்வி பணிப்பாளர்(தமிழ்) அவர்கள் டெங்கு கட்டுப்பாடு பற்றிய மாதாந்த அறிக்கை சகல பாடசாலைகளில் இருந்தும் அனுப்பி வைக்கப்படுகிறது எனவும் இதற்கு தாங்கள் பூரண ஒத்துழைப்பு வழங்குவதாகவும் தெரிவித்தார்
வர முன்னர் காத்துக்கொள்ளும் நடவடிக்கையாக டெங்கு நுளம்பு பரவும் இடங்களில் கூடுதலான கவனம் எடுக்குமாறும் பொதுமக்கள் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கையினை தொடர்ச்சியாக பேணி வருமாறும் கிராம அலுவலர் பிரிவுகளில் உள்ள வெள்ள வாய்க்கால் தொடர்பான விபரங்களினையும் வழங்குமாறும் வெள்ள வாய்க் காலினை சீர்படுத்துவதன் மூலம் வெள்ள அனர்த்தம் மற்றும் டெங்கு நோயிலிலிருந்து பாதுகாத்து கொள்ளலாம் எனவும் கருத்து தெரிவித்த பிரதேச செயலாளர் அவர்கள் அழைப்பை ஏற்று கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
இக் கலந்துரையாடலில் பிரதித்திட்டமிடல் பணிப்பாளர், சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர், பிரதிக்கல்விப் பணிப்பாளர், சிரேஸ்ட பொது சுகாதார பரிசோதகர்கள் நகரசபை,பிரதேச சபை உத்தியோகத்தர்கள், பொலிஸ் பொறுப்பதிகாரிகள், கிராம மட்ட உத்தியோகத்தர்கள் மற்றும் இதனுடன் தொடர்புடைய உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தென்மராட்சி பிரதேச செயலாளராக திரு F.C சத்யசோதி அவர்கள் 2025.09.03 அன்று காலை 9.20 மணியளவில் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.பிரதேச செயலாளர் அவர்களை வாழ்த்தி வரவேற்கின்றோம் .




















